
சென்னை: “ஜெயலலிதாவை ரோல் மாடல் என விஜய் ஏற்றுக்கொண்டார். அதனால், எங்களை ஊழல் சக்தி என்று கூற வழியே இல்லை. அப்படியென்றால் அவர் யாரை அப்படிக் குறிப்பிடுகிறார்?” என தவெக தலைவர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த கட்சி. மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணி.
விஜய் மக்களையும் நேரில் பார்ப்பது இல்லை. தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை. விஜய்க்கு களத்தில் உள்ள நிலவரம் தெரியவே இல்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்ததும் 72 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராதவர் விஜய்.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அமித்ஷாவே சொல்லிவிட்டார்; இது கூட தெரியாதவராக விஜய் உள்ளார். வீட்டை விட்டு வெளியே வந்தால் விஜய்க்கு நாட்டு நடப்பு தெரியும். ஒரு முறையாவது பிரஸ் மீட் வந்திருக்கிறாரா?. ஜெயலலிதாவை ரோல் மாடல் என அவர் ஏற்றுக்கொண்டார். எங்களை ஊழல் சக்தி எனக் கூற வழியே இல்லை.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற ஒருவர் (செங்கோட்டையன்), அவர் பெயரை கூற விரும்பவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர். அவர்தான் விஜய் உடன் தற்போது இருக்கிறார்.
அப்படியிருக்க விஜய் யாரை ‘தீய சக்தி’, ‘ஊழல் சக்தி’ எனச் சொல்கிறார். அதைக் குறிபிட்டு சொன்னால் தான் அது குறித்துப் பேச முடியும். விஜய் நாட்டு நடப்பு தெரியாமல் அறியாமையில் பேசி வருகிறார். \
திறமையற்ற பொம்மை முதல்வர்தான் ஸ்டாலின். அவர் திமுகவின் தலைவராக இருப்பதே வேதனைதான்”. என்றார்.

More Stories
ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி அனுப்பியுள்ளது திமுக: நயினார் நாகேந்திரன்
‘‘சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’’ – செல்வப்பெருந்தகை
விருதுநகரில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி – முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என தங்கம் தென்னரசு பேட்டி