திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 45 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 20 வகையான அன்ன பிரசாதங்களும், 25 வகையான பணியாரங்களும் ஆகம சாஸ்திர விதிகளின்படி, நைவேத்தியங்களாகப் படைக்கப்படுகின்றன. அதிகாலை முதல் மணி அடித்த பின்னர் முதலாவது நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
இதில், முத்கான்னம் (நெய் பொங்கல்), மாத்ரா அன்னம், திந்திரி நீரரான்னம் (புளியோதரை), தத்யோதனம் (தயிர் சாதம்), குடா அன்னம் (சர்க்கரை பொங்கல்), ஷாகா அன்னம் (கதம்பம் அன்னம்), சக்கரா அன்னம் (ரவா கேசரி) போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுடன் தினமும் 4 வகை பணியாரங்களையும் நைவேத்தியங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். இதில் லட்டு, மாஷாப்பம் (வடை), குடாப்பம் (அப்பம்), சக்கரப்பம் (தோசை) போன்றவை முதல் மணி அடித்த பிறகு நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.
ராஜபோகம்
சுவாமிக்கு 2-வது மணி அடித்த பின்னர் படைக்கப்படும் நைவேத்தியத்துக்கு ‘ராஜபோகம்’ என்று பெயர். இது மதிய நைவேத்தியத்தைக் குறிக்கும். இதில், ஷுதான்னம் (வெள்ளை சாதம்), புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், ஷீரா அன்னம் அல்லது ரவா கேசரி (சக்கரான்னம்) போன்றவை மதியம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.
சயன போகம்
சயன போகம் என்பது இரவு ஏகாந்த சேவைக்கு முன்னர் 3-வது மணி அடித்த பின்னர் சுவாமிக்குப் படைக்கப்படும் நைவேத்தியமாகும். இந்த சமயத்தில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை, ரவா கேசரி போன்றவை சயன போகம் என அழைக்கப்படுகின்றன.
சாயங்கால ஆராதனை
தினமும் சாயங்கால ஆராதனை ஏழுமலையானுக்கு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் கருவறையை (கர்ப்ப கிரகத்தை) மீண்டும் சுத்தம் செய்து, புது வகை மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு கைங்கர்யங்கள் நடத்தப்படுகின்றன. இரவு சயன போகத்தில் நள்ளிரவு ‘திருவீசம்’ எனும் சிறப்பு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. ‘திருவீசம்’ நடத்தும்போது, வெள்ளை அன்னம் மற்றும் வெல்லத்தில் தயாரித்த ருசியான சர்க்கரை பொங்கல் படைக்கப்படுகிறது.
ஏகாந்த சேவை
ஏகாந்த சேவையின்போது தினமும், ஏழுமலையானுக்கு இதமான சூட்டில் பால், பழங்கள், நெய்யில் வறுத்த உலர் பழங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நைவேத்தியத்துக்கும் தனி பெயர், தயாரிக்கப்படும் முறை, சமர்ப்பிக்கப்படும் நேரம் ஆகியவை முக்கியம். பக்தர்களுக்குப் பிரசாதங்களாக வழங்கப்படும் லட்டு, வடை, வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், தோசை போன்றவையே இதன் ருசிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

More Stories
திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்
விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம் – மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு கோலாகலம்
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை தொடக்கம்