
கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குவால்டோலி பகுதியில் உள்ள விஐபி சாலையில், பிரபல புகையிலை தொழிலதிபரின் மகன் ஓட்டி வந்த அதிவேக லம்போர்கினி கார், நேற்று (பிப்-8) பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதில், 6 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.
“தொழிலதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா ஓட்டி வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மக்கள் மற்றும் பல வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்து ரெவ்-3 மால் அருகே மாலை 3.15 மணியளவில் நிகழ்ந்தது” என்று கான்பூர் மத்திய பகுதியின் துணை ஆணையர் அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
முதலில் அந்த கார் ஒரு ஆட்டோ ரிக்சாவின் மீது மோதியதாகவும், பின்னர் நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதன் ஓட்டுநர் சுமார் 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. அந்த கார் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்தின் மீது ஏறி, சிறிது தூரம் இழுத்துச் சென்று, பின்னர் ஒரு மின்கம்பத்தின் மீது மோதி நின்றது.
காயமடைந்தவர்களில் ஒருவரான யமுனாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த தவுஃபிக், பல மீட்டர்கள் தூக்கி வீசப்பட்டு, காலில் பலத்த காயம் அடைந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கு எலும்பு முறிவுகள் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டன.
இதனால் கோபமடைந்த உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்தில் கூடி காரை முற்றுகையிட்டனர். ஓட்டுநர் காருக்குள்ளேயே இருந்த நிலையில், அவருடன் வந்த பவுன்சர்கள் கூட்டத்தை பின்னுக்குத் தள்ளி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஓட்டுநரை மீட்டு, அவரையும், காயமடைந்தவர்களையும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சேதமடைந்த லம்போர்கினி கார் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல் நிலையத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட மக்கள், விபத்தை ஏற்படுத்தியவரின் பவுன்சர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும், குடும்பத்தின் செல்வாக்கு காரணமாக காவல்துறை அவரிடம் மென்மையாக நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினர். சமரசம் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் சிலர் குற்றம் சாட்டினர்.
கே.கே.மிஸ்ரா, அப்பகுதியில் குட்கா உற்பத்தியாளர்களுக்கு புகையிலையை விநியோகிக்கும் ‘பன்ஷிதர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

More Stories
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை இன்றும் முடக்கம்!
“லண்டனை விட சிறப்பு… டெல்லி மெட்ரோவில் டிக்கெட் விலை குறைவு” – பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி பாராட்டு
எதிரி நாட்டு செயற்கைக்கோளை உளவு பார்க்கலாம்: இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் சாதனை