July 10, 2026

காவிரி நீரைப் பெற தமிழக அரசு முயன்று வருகிறது: வேளாண் அமைச்சர் தகவல்

கும்பகோணம்: மேகேதாட்டில் அணை கட்டாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்]கு உட்ப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டிடம், பள்ளி கட்டிடம் கூடுதல் பள்ளி கட்டிடம், சமையல் கூடம் உள்ளிட்ட 74 நிறைவு பெற்ற, ரூ.13 கோடியே 91 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான பணிகளை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் திறந்து வைத்தார்.

பின்னர், திறந்தவெளி நெல் கிடங்கில் நெல் மூட்டை சரிந்து உயிரிழந்த சின்ன பொண்ணு குடும்பத்திற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.2 லட்சம் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் மற்றும் இந்தவிபத்தில் லேசான காயமடைந்த சகுந்தலாவுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கருணைத்தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இது தொடர்பாக வேளாண்மை துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். நம் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். கண்டிப்பாக தமிழக முதல்வர் பெற்றுத் தருவார். எதிர்க்கட்சித் தலைவர் எது வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது பணியே சொல்லிக் கொண்டிருப்பது தான்.

மேகேதாட்டில் அணை கட்டாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசு பல வருடமாக பலவிதமாக சொல்லிக் கொண்டு வருகிறது. தமிழக அரசு அவ்வளவு சீக்கிரமாக விட்டுக் கொடுத்து விடாது. காவிரி நீர் பெறுவதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது,” என அவர் தெரிவித்தார்.

Spread the love