August 18, 2026

“கிலோவுக்கு ரூ.35 கொடுங்கள்!” – நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

தேனி: நெல்கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.35-க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கூலி, இயந்திர வாடகை போன்ற செலவுகள் இரு மடங்கு உயர்ந்துள்ளதை சுட்டி காட்டி இருக்கும் விவசாயிகள், மேற்கண்ட கோரிக்கையை விடுத்தது உள்ளனர்.

இது தொடர்பாக பேசிய தேனி மாவட்ட விவசாயிகள் பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெல்லை அரசே நேரில் விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், உரம் விலை அதிகரிப்பு மற்றும் கூலி உயர்வைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் விலையைச் சன்ன ரகத்திற்கு ரூ.2,750-க்கு மேல் கூடுதல் விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஆள் கூலி பல மடங்கு கூடிவிட்டன. எனவே அரசு தற்போது வழங்கும் கொள்முதல் விலை போதவில்லை. தற்போது அளிக்கப்படும் கொள்முதல் விலை, எங்களின் தற்போதைய செலவுகளுக்கு ஈடு கொடுக்கவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தற்போதைய அரசு விலை சன்ன ரகம் கிலோ ரூ.27.50-க்கும், ஒரு குவிண்டால் ரூ.2,750 என்ற கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதே போல பொது ரக நெல்லின் தற்போதைய அரசு கொள்முதல் விலை கிலோ ரூ.26-க்கும், ஒரு குவிண்டால் ரூ.2,600-ஆகவும் உள்ளது. விவசாயிகள் கோரும் விலை கிலோவுக்கு ரூ.35 அதாவது ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love