
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஜெயராம்.
கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்க முலாம்கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, தங்கம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் கோயிலின் முன்னாள் தேவசம்போர்டு அதிகாரிகள், பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி, கர்நாடக நகை வியாபாரி கோவர்த்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
இதற்கிடையில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கருப்பு பணம் புழக்கம் இருந்ததா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. இதையடுத்து, கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று ஜெயராமுக்கு சம்மன் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் ஜெயராம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஐயப்பன் அவர்களை சும்மா விடமாட்டார்.
பல ஆண்டுகளாக பல கோயில்களில் நடைபெறும் பூஜைகளுக்கு அழைக்கப்படுவதால் கலந்து கொள்கிறேன். அதுபோல சபரிமலை தொடர்பான ஒரு பூஜைக்காக என்னை அழைத்தனர். உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்டோர் பல முறை இப்படிப் பூஜைகளுக்கு என்னை அழைத்துள்ளனர்.
அதில், ஏதேனும் தவறு நடந்து இருந்திருக்கிறதா என்பதை நீதிமன்றமும், விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன. உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

More Stories
பிரிவினையின் போது உ.பி.யில் குடியேறிய 12,000+ குடும்பங்களுக்கு நிலம் – யோகி அரசு ஒப்புதல்
சைக்கிளில் 14 நாட்களில் எவரெஸ்ட் அடிவாரம் சென்ற முதல் இந்திய பெண்
விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்யும் மலையாளிகள்