February 7, 2026

“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” – ஒபாமா தம்பதி மீதான இனவெறி சாடல் குறித்து ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

நியூயார்க்: அமெரிக்க நாட்டில் முதல் கருப்பின் அதிபராக பராக் ஒபாமா அறியப்படுகிறார். இந்நிலையில், அவரையும், அவரது மனைவியையும் இனவெறி ரீதியாக விமர்சிக்கும் வகையிலான பதிவு ஒன்று அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்த பதிவு வெளியான நொடி முதலே அந்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கண்டனத்தை பெற்றது. இதில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினரும் அடங்குவர்.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறியதாவது: “நான் அந்த வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை. நான் அதன் முதல் பகுதியை மட்டுமே பார்த்தேன். அது தேர்தலில் இயந்திரங்கள் மூலம் நடந்த வாக்கு மோசடி தொடர்பானது. அதன் பின்னர் அதை மக்கள் பார்வைக்கு பகிர்ந்தேன். பொதுவாக இது மாதிரியான வீடியோக்களை முழுவதுமாக பார்ப்பார்கள். ஆனால், இதில் சிலர் அப்படி செய்யவில்லை என கருதுகிறேன். இந்த விவகாரத்தில் நான் தவறு செய்யவில்லை. அதனால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றார்.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டது. அதில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவரின் மனைவி மிச்செல் ஒபாமாவின் முகத்தை காட்டுக்குள் உள்ள குரங்கு கூட்டத்தில் உள்ள குரங்கின் முகத்துக்கு வைத்து 2020 தேர்தல் உடன் ஒப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், வீடியோ பகிரப்பட்ட 12 மணி நேரத்தில் அது நீக்கப்பட்டது. முன்னதாக, இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பணியாளர் தவறாக பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Spread the love