
கோர்ட்டுக்கு வந்த நிகிதா
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவலாளி அஜித்குமாரை அழைத்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் மரண வழக்கு பதிவு செய்த சிபிஐ, வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தது.
மேலும், சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முக சுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளைய ராஜா ஆகிய 4 பேரின் பெயர்கள் சேர்க்கபட்டது.
தொடர்ந்து, இந்த வழக்கில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை விசாரிக்க சிபிஐ தரப்பில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான நிகிதாவிடம், நகை திருட்டு புகாரை சிபிஐ முடிக்க முடிவு செய்திருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நிகிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக எழுத்து பூர்வமாக மனு தாக்கல் செய்ய நிகிதாவுக்கு உத்தரவிடபட்டது. இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகிதா நேரில் ஆஜராகி எழுத்து பூர்வ மனு தாக்கல் செய்தார்.
திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நகை திருட்டு வழக்கை முடித்து வைக்கிறோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு நிகிதா சம்மதம் தெரிவித்ததன் பேரில் நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.

More Stories
சோழவந்தானில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி க்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் வெள்ளாளர் முன்னேற்றக் கழக எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
முதியோர் உதவித்தொகை-3200 ரூபாய் வரவு வைப்பு-முக ஸ்டாலின் அறிவிப்பு!
10 லட்சம் தொண்டர்கள்.. 4 லட்சம் பேருக்கு உணவு! திருச்சியில் திமுகவின் அசுர பலம்- அமைச்சர் கே.என். நேரு தகவல்