
சென்னை: 2047-க்குள் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய வேண்டுமானால் அறிவியல்-தொழில்நுட்பத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி வலியுறுத்தினார்.
11-வது ஐஐடி தொழில்முனைவோர் உச்சி மாநாடு பிப்ரவரி 6 முதல் 8-ம் தேதி வரை ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சிப் பாதையிலும், 2047-க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
எனவே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்ப இறக்குமதியை குறைத்து ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் தொழில்முனைவுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு திறன்களை பலப்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.
அந்த வகையில் இந்த பணியை ஐஐடி கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாகச் செய்து வருகிறது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவும் யூனிகார்ன் இந்தியா வெஞ்சர்ஸ் நிறுவனமும் இணைந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஆழ்ந்த தொழில்நுட்ப நிதியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிதியம், தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களுடன் கூடிய அறிவுசார் சொத்துரிமை, பொறியியல் புத்தாக்க தொழில் நிறுவனங்களில் குறிப்பாக ரோபோட்டிக்ஸ், விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை, செமிகண்டக்டர் துறைகளில் முதலீடு செய்யும். முதல்கட்டமாக 25-க்கு மேற்பட்ட புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காமகோடி பேசினார்.

More Stories
“இப்படிப்பட்ட காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோ வைரல்
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி
விமானங்களின் தரப் பரிசோதனை: 754-ல் கோளாறானவை 377 – மத்திய அரசு தகவல்