
புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தாண்டு பிப்.3-ம் தேதி வரை பரிசோதிக்கப்பட்ட 754 விமானங்களில், 377 விமானங்களில் கோளாறுகள் இருந்தன என்ற அதிர்ச்சி தகவலை மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்தார்.
விமானங்கள் பரிசோதனை தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இது போன்ற 353 சம்பவங்கள் நிகழ்ந்தன. 2024-ம் ஆண்டு மொத்தம் 421 தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய ஆண்டின் 448-ஐ விடக் குறைவு.
அனைத்து விமானங்கள் மற்றும் விமான நிலைய இயக்குநர்களுக்கான விதிமுறைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகளுக்கு இணங்குவதைக் கண்காணிக்க, விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஒரு முறையான பாதுகாப்பு மேற்பார்வை முறையைக் கொண்டுள்ளது. இதில் கண்காணிப்பு, திடீர் சோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை தணிக்கைகள் ஆகியவை அடங்கும்.
ஏதேனும் மீறல்கள் அல்லது விதிமுறைகளுக்கு மாறானது எனக் கண்டறியப்பட்டால், டிஜிசிஏவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக டிஜிசிஏ ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது. விமானங்களின் அனைத்துவகைக் குறைப்பாடுகளையும் டிஜிசிஏவிற்குத் தெரிவிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள தனியார் விமான நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தம் முழு விமானங்களையும் அவ்வப்போது ஆய்வு செய்கின்றன. இதில், பல்வேறு வகையான உபகரணங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த உபகரணங்களின் முன்னுரிமை அல்லது அவசரநிலையின் அடிப்படையில் இவை ஏ, பி, சி மற்றும் டி என நான்கு வகை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஆய்வு செய்த அதே காலகட்டத்தில் டிஜிசிஏவும் அனைத்து நிறுவனங்களின் விமானங்கள் மீது 3,890 கண்காணிப்பு ஆய்வுகளை நடத்தியுள்ளது.

More Stories
“இப்படிப்பட்ட காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோ வைரல்
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!