
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவத்தை முன்னிட்டு நம்பெருமாள் நேற்றிரவு நெல்லளவு கண்டருளினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் ஜன.23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அன்று மாலை முதல் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வந்தார். இந்நிலையில், நேற்றிரவு திருக்கொட்டாரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி நெல் அளவு கண்டருளினார். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் வைபவம் இன்று (ஜன.30) நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நாளை (ஜன.31) காலை நடைபெறுகிறது.
தொடர்ந்து, பிப்.1-ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சியும், நிறைவு நாளான பிப்.2-ம் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

More Stories
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண திருவிழா
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு
மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்