
மதுரை: மதுரை உட்பட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரிய வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலி கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: “கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய 13 தென் மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் அனுமதி பெறாமல் கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், மாநில நெடுஞ்சாலை, கிராமச் சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் மற்றும் சாதி அடிப்படையிலான பிளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பேனர்கள் கட்டப்படுகின்றன. இவைகளால் தேவையற்ற மோதல்கள் ஏற்படுகிறது. தமிழ்நாடு உள்ளாட்சி விதிகளின்படி போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள், போர்டுகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி எந்த அனுமதியும் பெறப்படுவதில்லை.
அனுமதி பெறாமல் செயல்படுபவர்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமல் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கவும், அவற்றை அகற்றவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. மனு தொடர்பாக 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

More Stories
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
குரூப்-2, 2ஏ தேர்வு கடைசி நேரத்தில் ரத்து: