August 12, 2026

ஆடி அமாவாசை: திருச்சி – ஸ்ரீரங்கம் காவிரியில் பக்தர்கள் வெள்ளம்

திருச்சி: ஆடி அமாவசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தமிழர்களின் பராம்பரிய வழிபாடு முறைகளில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதங்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தங்களது குடும்பத்தில் உயிரிழந்த முன்னோருக்கு புனித நதிக்கரைகளில் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும் ஆண்டுக்கொரு முறை மட்டுமே வரும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைகள் சிறப்புமிக்க அமாவாசை தினங்களாக கருதப்படுகிறது.

அன்றைய தினங்களில் முன்னோர்களுக்கு செய்யத் தவறிய, விடுபட்ட திதி, தர்ப்பணங்களை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் செய்தால், ஆண்டு முழுவதும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, ஆடி அமாவாசையையான இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருச்சி அம்மா மண்டபத்தில் குவிந்தனர். ஆடி மாதத்தில் இரு கரைகளையும் தொட்டு பெருகி ஓட வேண்டிய காவிரியில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பக்தர்கள் காவிரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

மேலும், கரையில் அமர்ந்து சிறப்பு பூஜைகள் செய்த பிராமணர்கள் உள்ளிட்ட சிலர் தங்களது பூணுாலை மாற்றி கொண்டனர். ஆடி அமாவாசையொட்டி ஸ்ரீரங்கத்தில் போலீஸார், ஊர்க்காவல் படை என 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத் துறை போலீஸார் சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Spread the love