புதுடெல்லி: இந்தியாவுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள – ஐக்கிய அரபு அமீரகம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இந்தியாவுடன் நெருங்கிய நட்பு நாடாக இருப்பதோடு, இந்தியாவின் எரிசக்தி தேவையை நிறைவேற்றும் முதல் 5 நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஈரான்- அமெரிக்கப் போர் தொடங்கியதில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களை யுஏஇ மீது ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், இதற்கு வெளியே இருக்கும் யுஏஇ-யின் ஃபுஜைரா, கோர் ஃபக்கன் ஆகிய துறைமுகங்கள் உலகளாவிய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் மையங்களாக உள்ளன. இதனால் இவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துகிறது. மத்திய கிழக்கின் பொருளாதார வளர்ச்சியின் மையமாக யுஏஇ திகழ்வதால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைவிட அதிகளவிலான ஏவுகணைகளை அமீரகம் மீது ஈரான் ஏவி வருகிறது.
சவுதி அரேபியாவும் கத்தாரும் பாகிஸ்தானுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதேபோன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொள்ள யுஏஇ விரும்புகிறது. அதன் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்தபோது, பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான விருப்ப கடிதத்தில் கையெழுத்திட்டார்.
6 மாதங்களுக்குள் பாதுகாப்பு கூட்டாண்மை ஒப்பந்தம் செய்ய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பிரதமர் மோடி வரும் 18ம் தேதி நெதர்லாந்து செல்லும் வழியில் அபுதாபி செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது முந்ரா- ஃபுஜைரா- அகாபா புதிய வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் நிறைவேறும் என கூறப்படுகிறது.
ஜோர்டானின் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் சுரங்கங்களைச் செங்கடலில் உள்ள அகாபா துறைமுகத்துடன் இணைக்க 360 கி.மீ நீள ரயில் பாதையை அமைக்க 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை அமீரகம் கடந்த மாதம் இறுதி செய்தது. பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் ஆகிய இரண்டும் இந்தியாவின் உரத் தயாரிப்பிற்கு மிக முக்கியமானவை. இந்தியா- அமீரகம் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
பிஹார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் உட்பட 32 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு
நாசிக் டிசிஎஸ் விவகாரம்: 25 நாட்களுக்குப் பிறகு நீடா கான் கைது – பின்புலம் என்ன?
மம்தா ராஜினாமா செய்யாததால் மேற்கு வங்க சட்டப்பேரவை கலைப்பு