
சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள அறைகள் பராமரிப்பு பணிகளுக்கு பொதுப் பணித் துறை டெண்டர் கோரியது. பிப்ரவரி 28-ஆம் தேதி கோரப்பட்ட இந்த டெண்டர் படிவங்களை சமர்ப்பிக்க இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
டெண்டர் கோரி விண்ணப்பிக்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள், பொதுப் பணித் துறை செயற்பொறியாளரிடம் தள ஆய்வு சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
சான்று கோரி விண்ணப்பித்தும் சான்று வழங்காததால், டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்கக் கோரி, ஒப்பந்ததாரர்கள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்களுக்கு தள ஆய்வு சான்று வழங்கப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜி.ரவீந்திரன் தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெண்டர் நடவடிக்கைகளை தொடர அனுமதியளித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

More Stories
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து