முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: ‘கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் எத்தகு அனுமதியும் வழங்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி, அத்திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்’ என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முயற்சி கவலை அளிக்கின்றது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின்போது, தமிழ் நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டோம்.
ஓஎன்ஜிசி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பிற்கான ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்த போதுகூட அந்த முயற்சியினைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திடும் வகையில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ( State Environment Impact Assessment Authority- SEIAA) இத் திட்டத்திற்கான சுற்று சூழல் அனுமதியினை வழங்கக் கூடாதெனத் தக்கவகையில் அறிவுறுத்தினோம்.
அதேபோல், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் புதிதாகப் பதவியேற்றிருக்கும் அரசு தனது உறுதியான எதிர்ப்பைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும்.
மேலும், கடற்பகுதியில் இயற்கை வளங்களையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் இத்திட்டத்திற்கு மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ( Tamil Nadu State Coastal Zone Manangement Authority ) எத்தகு அனுமதியும் வழங்கக்கூடாது என தமிழ் நாடு அரசு உரிய வகையில் அறிவுறுத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகின்றது’ எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
முதலமைச்சர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு:வீடியோ கான்பரன்ஸ் வேண்டாம்..நீதிமன்றம் வைத்த செக்
”மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசவில்லை.. தவறாக பரப்புகின்றனர்” – ராகவா லாரன்ஸ்
‘நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..’ – வானிலை மையம்