கரூர் சம்பவம் தொடர்பாக இன்று செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. அதற்காக இன்று அவர் டெல்லியில் நேரில் ஆஜராகிறார்.
கரூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சென்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் இந்த விசாரணை, தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான செந்தில் பாலாஜிக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியுடன் விமானம் மூலம் டெல்லி சென்றடைந்துள்ள செந்தில் பாலாஜி, இன்று காலை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக உள்ளார். கரூர் சம்பவத்தின் போது நடைபெற்ற நிகழ்வுகள், அதில் அவரது பங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தச் சூழலில், பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இது குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 41 பேர் உயிரிழந்த அந்தத் துயரமான நேரத்தில் எவ்வித விளம்பரமும் இன்றி முதலில் களத்திற்குச் சென்றவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தான் என்று சுட்டிக்காட்டினார்.
திமுக மருத்துவர் அணி
அதேசமயம், செந்தில் பாலாஜி அந்தப் பதற்றமான சூழலிலும் திமுக மருத்துவர் அணி என்ற பெயரில் 10 ஆம்புலன்ஸ்களைக் கொண்டு வந்து, நேரடி ஒளிபரப்பு (Live Coverage) செய்து விளம்பரம் தேடிக்கொண்டிருந்தார் என அண்ணாமலை சாடினார். மேலும், ’10 ரூபாய் பாலாஜி’ என்று மக்கள் விமர்சித்த போதுதான் செருப்பு வீசப்பட்டதாகவும், இந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகள் வெளியே வரச் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டதில் இருந்தே செந்தில் பாலாஜி மிகுந்த பதற்றத்துடன் காணப்படுவதாகவும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் ஆவேசப்படுவதே அதற்குச் சான்று என்றும் அண்ணாமலை கூறினார்.
ஒரே நேரத்தில் பிரேதப்பரிசோதனை
அதே நேரத்தில், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை கேள்விகளை எழுப்பியுள்ளார். கரூர் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு விடிய விடிய பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், விளாத்திக்குளம் மாணவி வழக்கில் இன்னும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வராதது ஏன் என்று அவர் வினவினார். இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
வார் ரூம்
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்த விவகாரம் தொடர்பாகத் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ‘வார் ரூமில்’ நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிபிஐ விசாரணை தமிழகத்தில் நிலவும் தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துயரச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு?
ஒருபுறம் ஆளுங்கட்சி நிர்வாகி, மறுபுறம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் என இருமுனைத் தாக்குதலில் இந்த வழக்கு நகர்வதால், வரும் நாட்களில் டெல்லி சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளிவரும் தகவல்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. விசாரணையின் முடிவில் இந்தத் துயரச் சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்த தெளிவான முடிவுகள் வெளிவரும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More Stories
இராசிபுரம் அருகே வியாபாரிகளிடமிருந்து ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 6,84,980 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் .
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது
நெல்லை அருகே எரிந்த நிலையில் இருந்த காரில் 4 சடலங்கள் மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை!