
பெங்களூரு: ‘காந்தாரா’ போல மிமிக்ரி செய்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதே நேரத்தில், மத உணர்வுகளை புண்படுத்தியது தொடர்பாக ரன்வீர் சிங்கை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
கோவாவில் நடந்த 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், காந்தாரா படத்தின் கதாபாத்திரம் போல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மிமிக்ரி செய்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. இது குறித்து ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய ரன்வீர் சிங்கின் மனுவை இன்று விசாரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். விசாரணையின்போது நீதிபதி எம்.நாகபிரசன்னா, ரன்வீர் சிங்குக்கு கடுமையான வாய்மொழி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நீதிபதி, “நீங்கள் ஒரு நடிகராக இருப்பதால், பலரின் மீது செல்வாக்கு செலுத்துகிறீர்கள். நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
நீங்கள் ரன்வீர் சிங்காக இருக்கலாம், நீங்கள் யாராகவும் இருக்கலாம். ஆனால், உங்கள் நாக்கை விருப்பத்துக்கேற்ப பயன்படுத்த முடியாது. இணையம் ஒருபோதும் எதையும் மறக்காது என்பதை நீங்கள் மறந்துவிடலாம்.
நடிகர் மேடைகளில் ஏறி இதையெல்லாம் செய்ய முயற்சிக்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களின் மத உணர்வு மதிக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு தெய்வத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
மாநில மக்களின் உணர்வுகளை யாராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் நிச்சயமாக உணர்வுகளைப் புண்படுத்திவிட்டீர்கள். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று நான் கூறவில்லை. இது மிகப் பெரிய அறியாமை. வார்த்தைகள் திரும்பப் பெறப்படலாம், ஆனால் இணையத்தில் உள்ள வீடியோக்களை திரும்பப் பெற முடியாது. பொது உணர்வுகளைத் தாக்கக் கூடாது” என்று நீதிபதி கூறினார்.
ரன்வீர் சிங் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஜன் பூவய்யா, ‘ரன்வீர் சிங்கின் கருத்துகள் முற்றிலும் உள்நோக்கமற்றவை. அவர் இதனால் ஏற்பட்ட எந்தவொரு காயத்தையும் நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கிறார்’ என்று கூறினார்.
இதனையடுத்து, இந்த வழக்கு மார்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும் வரை ரன்வீர் சிங்குக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

More Stories
‘‘சமூகத்தை ஒன்றிணைக்க பொது சிவில் சட்டம் அவசியம்’’: மோகன் பாகவத்
ஹரியானா அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி – ஐடிஎப்சி வங்கி ஊழியர்களின் பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு
தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!