April 28, 2026

சித்திரை திருவிழா எதிரொலி: மதுரையில் ஒரு கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா? இதை பாருங்க!

மதுரை மல்லிகை மீனாட்சி திருக்கல்யாண திருவிழா காரணமாக கிலோவுக்கு ₹500 வரை விற்கப்படுகிறது

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்களை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மதுரை சித்திரை திருவிழா

மதுரையில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சித்திரை திருவிழா காரணமாக நகரம் முழுவதும் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக கருதப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால், அதனை முன்னிட்டு பூ சந்தைகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் இந்நாட்களில் அதிகமான வர்த்தகத்தை சந்தித்து வருகிறது.

  

மதுரை மல்லிகை பூ விலை

மதுரை மல்லிகை பூ அதன் தனித்துவமான மணமும் தரமும் காரணமாக மிகவும் பிரபலமானது. இதனால் உள்ளூர் சந்தை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, வலையங்குளம், எலியார்பட்டி, சோளங்குறுணி போன்ற பகுதிகளில் இருந்து தினசரி அதிகளவில் பூக்கள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

விலை (ஒரு கிலோ)
மதுரை மல்லிகை₹400 – ₹500
பிச்சிப் பூ₹350 – ₹400
கனகாம்பரம்₹350 – ₹400
முல்லைப் பூ₹300 – ₹350
பன்னீர் ரோஜா₹150 – ₹180
அரளி₹100 – ₹120
சம்பங்கி₹70 – ₹80

மதுரை பூ மார்க்கெட் நிலவரம்

தற்போது மல்லிகை பூவின் வரத்து நல்ல அளவில் இருந்தாலும், அதன் விலை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை ரூ.500 வரை விற்பனையானது. பின்னர் அது ரூ.400 வரை குறைந்தது. ஆனால் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு தேவைகள் திடீரென அதிகரிக்கும் என்பதால், மீண்டும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதிமுக செஞ்சதை கூட திமுக MLA D Velu செய்யல! மூன்று ஆண்டுகளாக போராடுறோம்!

ஒரு கிலோ மல்லிகை ரூ.500 வரை விற்பனை

மற்ற பூக்களின் விலையும் நிலைமையைப் பொறுத்து மாறி வருகிறது. பிச்சி மற்றும் கனகாம்பரம் பூக்கள் ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கப்படுகின்றன. முல்லை ரூ.300 முதல் ரூ.350 வரை உள்ளது. அரளி பூ ரூ.100 முதல் ரூ.120 வரை விலை கொண்டுள்ளது. துளசி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. பன்னீர் ரோஜா ரூ.150 முதல் ரூ.180 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா

மேலும், மரிக்கொழுந்து ரூ.40 முதல் ரூ.80, செண்டுபூ ரூ.30 முதல் ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. மெட்ராஸ் மல்லி ரூ.300 அளவில் உள்ளது. சம்பங்கி பூ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. தாமரை மலர்கள் தனித்தனியாக விற்பனை செய்யப்படுகின்றன.

பூக்களின் விலை மேலும் உயரக்கூடும்

இதே நேரத்தில், வெயிலின் தாக்கம் காரணமாக அருகம்புல் வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.120 இருந்த அருகம்புல், தற்போது ரூ.140 வரை உயர்ந்துள்ளது. திருவிழா காலம் முடியும் வரை பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love