
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியதாவது: தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் காலம் என்பதால் பல்வேறு பணிகள் இருக்கின்றன.
பள்ளிக்கல்வித் துறையில் பாடத்திட்ட மாற்றப் பணிகள் இருப்பதாலும், இந்த முறை என்னால் மாணவர்களுடன் கல்விச் சுற்றுலாவுக்கு வெளிநாடு செல்ல முடியவில்லை.
அதனால் 40 பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 4 ஆசிரியர்கள், அதிகாரிகள் மலேசியாவுக்கு செல்கின்றனர். ஏற்கெனவே இங்கிருந்து சென்று மலேசியாவில் தங்கி படித்து வரும் 17 மாணவர்களை சந்திப்பார்கள்.
அங்குள்ள நூலகத்தையும், பல்கலைக்கழகத்தையும் பார்வையிட்டு, மலேசியாவின் பண்பாட்டு தொடர்பான விஷயங்களையும் தெரிந்து கொள்வார்கள். மேலும், தொழில் நிறுவனத்தை நடத்துபவர், தொழில் முனைவோரை சந்தித்தல் போன்றவற்றில் பங்கேற்க உள்ளனர். எல்லா மாணவர்களுக்குள்ளும் ஒரு தனித் திறன் இருக்கும்.
அவர்களை மேலே கொண்டு வரும் வகையிலான கல்விச் சுற்றுலாவாக இது இருக்கும். அதேபோல், கனடாவில் இருந்து இங்கு வந்துள்ள பார்வையாளர்கள், தமிழக மாணவர்களை அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, அடுத்த ஆண்டில் தமிழக பள்ளி மாணவர்கள் கனடா செல்வார்கள்.
செய்முறைத் தேர்வு: செய்முறைத் தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. மாணவர்கள் பதற்றமின்றி உற்சாகமாக தேர்வுகளை எழுதி வருகின்றனர். உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை பலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில் நாங்கள் அதை செய்து காட்டியுள்ளோம். அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தான் விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 நாள் மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!
பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்