திமுக சார்பில் திருச்சியில் மாநாடு நடைபெறவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பங்கேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில், மாண்புமிகு கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மார்ச் 9ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநில மாநாட்டிற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
10 லட்சம் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த மாநாடு இந்தியாவே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திமுகவின் திருச்சி மாநாடு
இந்த திருச்சி மாநாடு சாதாரண கூட்டமாக அல்ல; 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வெற்றியின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய திருப்புமுனை மாநாடாக அமைய வேண்டும். திருச்சியில் திரளும் மகத்தான கூட்டம், வரவிருக்கும் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கான உறுதியான அறிகுறியாக அமைய வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
அசுர வேகத்தில் திமுக பரப்புரைகள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு “ஓரணியில் தமிழ்நாடு”, “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” பரப்புரைகள், இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டங்கள், மகளிரணி மாநாடுகள், வீடு தோறும் நேரடி பரப்புரைகள் என அசுர வேகத்தில் கழகம் செயல்பட்டு வருகிறது. எனினும், திருச்சி மாநில மாநாடே இந்த தேர்தலுக்கான ‘மெயின் பிக்சர்’ ஆக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு
இந்த மாநாட்டில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட – மாநகர – நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வார்டு – கிளை செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்பாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தவறாது கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
சார்பு அணிகளின் மாநிலச் செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், தங்கள் அணியின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
10 லட்சம் பங்கேற்கும் மாநாடு
10 லட்சம் பேரின் பங்கேற்பை முன்னிட்டு மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்களை நடத்தி, திருச்சிக்கு வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை, வாகன வசதிகள், முன் ஏற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும். வாகன விவரங்களை மார்ச் 1ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த வசதிகளை முன்கூட்டியே ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒரு நிர்வாகியும் விடுபடாமல் மாநாட்டில் பங்கேற்க வேண்டும். கழகத் தலைவர் அவர்கள் உரையை நிறைவு செய்யும் வரை முழு ஒழுக்கத்துடன் இருக்க மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். மாவட்டத்தின் கடைசி வாகனம் கிளம்பிய பின்பே மாவட்ட செயலாளர்கள் மாநாட்டிற்கு புறப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரை புரண்டு ஓடும் காவிரியாய்… தடைபோட முடியாத கடல் அலையாய்… திருச்சியில் திரள்வோம்! கழகத் தலைவர் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்க உறுதி எடுத்திடுவோம்! மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்! என அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More Stories
மீண்டும் அரசியலில்… தனியாக களமிறங்கும் சசிகலா; ஒரு காலத்தில் தமிழ்நாட்டு அரியணைக்குப் பின்னால் அதிகாரம் பெற்றவராக இருந்தவர்
ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு!
“கூட்டணிக்கு வருமாறு தவெக அழைத்துள்ளது” – கிரிஷ் சோடங்கர் கருத்தால் திமுக அணியில் சலசலப்பு