சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் இப்போது தேசியளவில் பெரிய விவாதமாக வெடித்துள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்கள் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறது. இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தான் 100 சதவீத ஆதரவைத் தருவதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
“தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களைத் தண்டிப்பதாக அமைந்துவிடக் கூடாது” என்பது தான் கடந்த சில நாட்களாகவே தென்னிந்திய அரசியலில் ஒலித்துக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு
இதற்கிடையே ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டும் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆந்திராவில் என்டிஏ அரசில் முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடு, மத்திய அரசின் புதிய மசோதாக்கள் மற்றும் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தனது 100 சதவீத ஆதரவைத் தெரிவித்து, இந்த விவாதத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நகர்வு ‘அறிவியல் பூர்வமானது’ என்று அவர் பாராட்டியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை கணக்கெடுப்போடு இணைக்கக் கூடாது என்பதில் நாயுடு மிகவும் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகையுடன் இணைக்கக்கூடாது.. இப்போது ஒட்டுமொத்த இடங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் திட்டத்திற்கு நான் 100% ஆதரவு தருகிறேன்.. திருப்திகரமான திட்டம் தான்.. இறுதியாகத் தொகுதி மறுசீரமைப்பில் சரியான பார்முலாவை கண்டுபிடித்துவிட்டார்கள் என்றே நம்புகிறேன்” என்றார்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தென் மாநிலங்களின் எம்பி சீட்களைக் குறைப்பது நியாயமற்றது என்று வாதிட்டு வந்த நாயுடு, இப்போது தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அந்தச் சிக்கல் தீர்க்கப்பட்டாகக் குறிப்பிட்டார். தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படுவதால், மக்கள் தொகைக்கும் இடங்களுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது என்றும், இந்த ஃபார்முலாவில் தான் முழுத் திருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இதை வைத்து சதி செய்வதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், ஒரு கட்சி மக்களுக்காக வேலை செய்யாவிட்டால் எத்தனை சீட்கள் இருந்தாலும் தோற்றுப்போகும் என்பதே எதார்த்தம் என்று சாடியுள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம்
மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் நாயுடு தனது பழைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பெண்கள் வெறும் ‘நிழல் அதிகாரிகளாக’ செயல்படுகிறார்கள் என்ற வாதத்தை முற்றிலுமாக நிராகரித்த அவர், இட ஒதுக்கீடு வரும்போது தகுதியானவர்கள் தானாகவே முன்வருவார்கள் என்றும் அது காலப்போக்கில் தரமான பங்களிப்பை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
புதிய கொள்கை
மக்கள் தொகை தொடர்பாகவும் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். முன்பு குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக வலியுறுத்திய அவர், இப்போது “பெரிய குடும்பங்களை” ஊக்குவிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த மாதமே இதற்கான புதிய மக்கள் மேலாண்மைக் கொள்கையை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தனிமை போன்ற சமூகச் சிக்கல்களைத் தவிர்க்கவும், இந்தியக் குடும்பங்களைப் பாதுகாக்கவும் இந்த மாற்றம் அவசியம் என்பது அவரது வாதம்.

More Stories
உதயநிதி சொத்து விவரம் வழக்கு: வருமான வரித் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
கேரளா- திருச்சி ரயில் வழித்தடத்தில் முக்கிய
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு