சென்னை: “ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம். தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா. தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.
இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தே தீர வேண்டும்.
தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பாஜக அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்?
2001-ம் ஆண்டுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடியும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமரின் பதில் என்ன?
5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
“நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்” என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் செயல்களை திமுக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!” என்று பதிவிட்டுள்ளார்.
தொகுதி மறுவரையறை சட்ட மசோதா குறித்து மத்திய அரசு வட்டாரங்கள், “மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த முடியும்.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மக்களவையில் மூன்றில் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக அதிகரிக்கும். இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்,” என்று தெரிவித்தன.

More Stories
ரூ.245.85 கோடி மதிப்பு.. திமுக அரசின் 46 திட்டங்கள்.. மொத்தமாய் ரத்துசெய்த விஜய் அரசு!
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை: ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து