July 15, 2026

புதிய வரலாற்றை படைத்திட பலம் பெறுவோம் – தென்காசி அகழாய்வு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கில் இருந்து தொடங்கி எழுதுவோம், வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.

தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசை திருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த் தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!

மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்! வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட கள ஆய்வு மற்றும் அகழாய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த சதுர வடிவ செங்கல் படிக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழக தொல்லியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன் கள ஆய்வை தொடர்ந்து மேற்கொள்ள தற்போது பொருப்பேற்றுள்ள அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love