April 2, 2026

“மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை – உதய சூரியன் இடையேதான் போட்டி” – சுந்தர்.சி

சென்னை: “மதுரை மத்திய தொகுதியை பொருத்தவரை இரட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் இடையே தான் போட்டி” என நடிகர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”மதுரை மத்திய தொகுதி மக்கள் நிச்சயம் எனக்கு கனியை தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் மாதத்தில் 15 நாட்கள் எனது வாழ்க்கை மதுரையில்தான் இருக்கும் என்பதை உறுதிப்பட சொல்கிறேன்.

திரைப்படத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக நிறைய சாதனையை படைத்திருக்கிறேன். எனது அடுத்த கட்ட நகர்வு என்பது தேர்தல் முடிவுகளை வைத்து முடிவு செய்யப்படும். நடிகர் விஜய் என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அதேபோல நானும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன்.

எனது மனைவி குஷ்பு, அவரை தம்பியாக தான் கருதுகிறார். அவரும் குஷ்புவை அக்காவாக தான் பார்க்கிறார். அதனால் எந்த வகையிலும் அவரைப் பற்றி, அவரது கட்சியைப் பற்றி பேசவோ, விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொருத்தவரை இரட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் இடையே தான் போட்டி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love