February 28, 2026

மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு! ஏற்பாடுகள் தயார்!!

மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

News image

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டி நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வருடம் தோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை மார்ச் 2ஆம் தேதி, 12 ஆம் வகுப்புக்கு துவங்க உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறையால், மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படையினரும் முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.Advertise with us

இந்நிலையில் தேர்வு மையங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளான மின்விசிறி, குடிநீர், மின் விளக்குகள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்தும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தேர்வுகளில் முறைகேடுகளை களையும் வகையில் அது குறித்த அறிவிப்புப் பலகையும் பள்ளி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து பள்ளிகளிலும் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love