February 7, 2026

முகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் – நடந்தது என்ன?

முகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் - நடந்தது என்ன?

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியின் போது பந்து முகத்தில் தாக்கியதில் வலது கண்ணிற்குக் கீழே காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.

காயத்திற்குப் பிறகு முகக்காயங்களுக்குப் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகைச்சுவையாக, ‘பந்துக்கு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதில் பரிதாபம் என்னவெனில் வலைப்பயிற்சியில் பவுலிங்கோ, பேட்டிங்கோ செய்து கொண்டிருக்கும் போது இந்தக் காயம் ஏற்பட்டிருந்தால் ஆறுதலாகக் கூட இருந்திருக்கும். ஆனால் வலைப்பயிற்சியை ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்த போது பந்து வந்து தாக்கி முகத்தைப் பதம்பார்த்து விட்டது.

கடந்த மாதம் சிட்னியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தசை காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறிய ஸ்டோக்ஸ், அதிலிருந்து தற்போது சிகிச்சையில் உள்ளார்.

அபுதாபிக்கு சென்று தனது மீட்பு பயிற்சியை தொடர உள்ள அவர், அங்கு ஆண்ட்ரூ ஃப்ளின்டாஃப் வழிநடத்தும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் முறைசாரா பயிற்சியாளர் (informal coaching role) ஆகவும் இணையவிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு, இங்கிலாந்து அணிக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. இந்த வார இறுதியில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை அணியிலும் அவர் இடம்பெறவில்லை.

அவரின் அடுத்த சர்வதேச போட்டி, ஜூன் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் இங்கிலாந்தின் உள்நாட்டு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியாக இருக்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், டெஸ்ட் கேப்டனாக தொடர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் தொடர்வதற்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

“அது என் முடிவு அல்ல. ஆனால் ஏதேனும் சூழ்நிலை வந்தால் என் கருத்தை கேட்பார்கள். அப்போது அவருக்கு முழு ஆதரவும் நம்பிக்கையும் அளிப்பேன். ‘பாஸ்’ உடன் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு சிறந்த மனிதர், அதே நேரத்தில் மிகச் சிறந்த பயிற்சியாளரும் ஆவார்,” என்று ஸ்டோக்ஸ் கூறினார்.

Spread the love