
தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை மண்டல மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், துணைத் தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாஷா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை: முரண்பாட்டின் மொத்த வடிவம் திமுக – காங்கிரஸ் கூட்டணி என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை மண்டல மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் நடந்த கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல், பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
சென்னை வடக்கு மண்டலத்துக்குட்பட தொகுதிகளுக்கு விருப்பமனு வழங்குவதை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். ஏராளமானோர் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைத்தனர். விருப்ப மனுவுக்கு வரும் 25-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: கடந்த தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். எத்தனை தொகுதி என்பது கூட்டணி கட்சித் தலைமையோடு பேசி முடிவு செய்யப்படும்.
ஆளும் கட்சி கடந்த முறை போட்டியிட்டதைவிட கூடுதல் இடங்களில் போட்டியிட நினைக்கிறார்கள். முரண்பாட்டின் மொத்த வடிவமாக திமுக – காங்கிரஸ் கூட்டணி உள்ளது. கூட்டணி கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றுவதற்கான பட்ஜெட். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. என்னுடைய பிரதான இலக்கு கட்சியிலே அதிகம் உழைத்தவர்கள் வெல்ல வேண்டும் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
“திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலை…!” – இபிஎஸ் கண்டனம்
பிப்.22-ல் கோவையில் திமுக இளைஞரணி கூட்டம்!
புதுச்சேரியிலும் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னம்