June 16, 2026

ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் விஜய் 2026 மே 25-ம் தேதியில் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநிலம் முழுவதிலும் இருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறு பரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழக முதல்வர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கு இணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட ஜூன் 15-ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதி நிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 2025-ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தள்ளுபடி விவரம் வருமாறு:

குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி (ரூபாயில்) 75,000 வரை பெற்றவர்களுக்கு கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி.

ரூ.75,000-க்கும் மேல் கடன் தொகை பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000மும் குறைந்தபட்சமாக ரூ.35,000மும் பணப்பயன் கிடைக்கும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

· 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி

· 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி

· 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி

ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர்க் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love