
பிப்ரவரி 28 அன்று வானில் ஒரு அரிய விண்வெளி நிகழ்வைக் காணலாம். புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன் ஆகிய ஆறு கோள்களும் வானில் நிலைகொள்வது போன்ற காட்சியை காண முடியும். இதனுடன் கூடுதலாக நிலவும் வானில் தென்படும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அடிவானத்திற்கு அருகே புதன், வெள்ளி, சனி, நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களும் ஏறக்குறைய நேர்கோட்டில் நிலைபெறும். சூரியன் மறைந்த பின்னர் சில நிமிடங்கள் மட்டுமே இந்த கோள்கள் புலப்படும். அதன் பின்னர் இந்த நான்கு கோள்களும் மறைந்துவிடும்.
எனவே, மேற்கு அடிவான திசையில் மரங்கள், வீடுகள், குன்றுகள் அற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உயரமான கட்டடம் அல்லது மலை உச்சியில் நின்றுகொண்டு பார்ப்பது சிறந்தது. வியாழன் மற்றும் யுரேனஸ் கோள்கள் வானில் தலைக்கு மேலே இருப்பதால், அவற்றை சில மணி நேரங்கள் காண முடியும்.
எப்போது, எங்கே காணலாம்?

மதுரையை எடுத்துக்கொண்டால், பிப்ரவரி 28 மாலை சூரியன் மறையும் நேரமான சுமார் 6:28 மணி முதல் மேற்கு அடிவானத்தை கூர்ந்து கவனிக்கத் தொடங்க வேண்டும்.
அதேபோல நம்மிடத்தில் சூரியன் மறையும் நேரம் நாம் மேற்கு அடிவானத்தை உற்றுநோக்கவேண்டும்.
சூரிய ஒளி மங்கி இருட்டு பரவும்போது முதலில் வெள்ளிக் கோள் பிரகாசமான ஒளிப்புள்ளியாக தென்படும். அதைத் தொடர்ந்து, இருட்டு அதிகமாகும்போது சற்று மேலே சனிக் கோள் காட்சி தரும். சனிக் கோளுக்கு அருகில்தான் நெப்டியூன் இருக்கும். ஆனால் இது வெறும் கண்களுக்குத் தென்படாது. இதைக் காண ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி தேவைப்படும்.
ஒளி மங்கி இரவாகும் போது, சில நிமிடங்கள் மட்டுமே புதன் கோள் அடிவானத்துக்கு அருகே தென்படும். இவை அனைத்தும் 6:45 மணிக்குள் நடந்து முடிந்துவிடும். வெள்ளி மற்றும் புதன் கோள்கள் 6:55 மணிக்குள் மேற்கில் மறைந்துவிடும். 7:20 மணியளவில் சனிக் கோளும் மறைந்துவிடும். இவையெல்லாம் அடிவானுக்கு மிக நெருக்கமாக புலப்படும்.
இந்த மூன்று கோள்களை இனம் காண முயன்ற பிறகு, தலையை உயர்த்திப் பார்த்தால் நிலவும் அதன் அருகே வியாழன் கோளும் தென்படும்.

More Stories
பிரதமர் வருகை: திருப்பரங்குன்றம் கோயிலில் சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதி!
79 நாடுகளுக்கு 99 முறை பயணங்கள்! 19 நாடாளுமன்றங்களில் உரை! பிரதமர் மோடி சாதனை!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைப்பு