July 15, 2026

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தடைந்தன – உயிர் தப்பியவர் அதிர்ச்சி பேட்டி

சென்னை: வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேரின் உடல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே ஜூலை 11ம் தேதியன்று கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது.

உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், கேரளத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர். படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் நேற்று விமானம் மூலம் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டன. அவர்களின் உடல்கள் இன்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த படகு விபத்தில் உயிர் பிழைத்த பழநியைச் சேர்ந்த நிர்மல் குமாரும் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவர் ஜூலை 11 அன்று நடந்த துயரச் சம்பவம் குறித்த தகவல்களை பகிந்துகொண்டார்.

அவர் பேசுகையில், “நாங்கள் ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த 20 பேர் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர். அதே நேரத்தில் படகு மூடிய அமைப்பைக் கொண்டிருந்ததால், உள்ளே சிக்கிக்கொண்ட 15 பேரால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.

மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு வருவதற்கு 10 நிமிடங்கள் ஆனது. எனவே, கடலில் குதித்தவர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். உடல்களை மீட்டுக்கொண்டு வருவதில் இந்திய மற்றும் வியட்நாமிய அரசுகள் எங்களுக்குப் பெரிதும் உதவின. தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர்” என்று கூறினார்.

Spread the love