எது உண்மையான கிரிக்கெட் வர்ணனை? – தோனியின் ‘ஹெலிகாப்டர் ஷாட்’ பதில்!

தோனியின் கிரிக்கெட் ஒரு பெரிய கவர்ச்சி என்றால் அவரது கேப்டன்சியின் அரிய நுணுக்கங்கள் உலகில் வேறு கேப்டன்களுக்கு அவ்வளவு எளிதில் கூடிவராதது. கிரிக்கெட் ஆட்டம் பற்றிய அவரது அறிவு அவரது நேர்காணல்களில் அவ்வப்போது வெளிப்படும் போது ஆச்சரியமான சில நுட்பங்கள் வெளிப்படுவதைக் கண்டு நிபுணர்களும் கூட மூக்கில் விரலை வைத்துள்ளனர்.
அதே போல் போட்டி முடிவின் போது பரிசளிப்பு நிகழ்ச்சியிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் வெற்றியையும் தோல்வியையும் அலசும் விதமே அலாதிதான். நாம் எதிர்பாராத ஒரு கோணத்தில் அவர் அந்தப் போட்டியை அணுகியிருப்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வர்ணனையாளர் ஜதின் சாப்ரூ என்பவருடன் உரையாடிய எம்.எஸ்.தோனியிடம், வீரர்கள் பலரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு கிரிக்கெட் வர்ணனையை தொழிலாக்கிக் கொண்டுள்ளது போல் ஏன் நீங்கள் வர்ணனையைத் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எம்.எஸ்.தோனி அளித்த பதில் வர்ணனை என்பதும் ஒரு கலையே என்பதை நமக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது. இதனை இப்போதைய தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் நிச்சயம் கவனித்து சுவீகரித்துக் கொள்ள வேண்டும்:
“வர்ணனை என்பது கடினமான விஷயம். ஆட்டத்தை வர்ணிப்பதும், விவரிப்பதும் தனிப்பட்ட வீரர்களின் செயலை விமர்சிப்பதும் எப்படியோ கலந்து விடும்; இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. இது மெல்லிய கோடு என்பதால்தான் நீங்கள் சில வேளைகளில் கருத்தில் அல்லது விமர்சனத்தில் எல்லை மீறி தவறிழைக்கிறீர்கள் என்பதை உணர்வதில்லை.
மாறாக, நான் ஆட்டத்தை விவரிப்பதை மட்டுமே செய்யும் இடத்தில் இருக்க விரும்புகிறேன். ஏதோ தவறு நடக்கிறது என்பதை நீங்கள் ஆட்டத்தில் உணர்ந்தால் நீங்கள் அதைச் சொல்வதில் தவறில்லை, ஆனால் அதை எப்படி முன்வைக்கிறீர்கள் என்பதுதான் கலை. அதாவது விமர்சனத்தை எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறிவைக்காமல் கண்ணியமாக அதே வேளையில் விஷயமும் போய்ச்சேர வேண்டும் என்ற வகையில் முன்வைப்பதுதான் கலை.
ஓர் அணி தோற்கிறது என்றால் அதற்குப் பின்னால் காரணங்கள் இருக்கின்றன. அக்காரணங்களை யாரும் புண்படாத விதத்தில் பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரை வர்ணனையின் உண்மையான கலை இதுதான்.
இன்னொரு பிரச்சினை புள்ளி விவரங்கள். வர்ணனையாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள். ஆனால் நான் புள்ளி விவரங்களில் அவ்வளவு தேர்ச்சியுடையவன் அல்ல. என் புள்ளி விவரங்களைக் கேட்டாலே நான் தொலைந்தேன். சிலர் ஒவ்வொரு காலக்கட்ட வீரர்கள் பற்றிய புள்ளி விவரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் வர்ணனையில் பிரமாதமாகத் திகழ்வார்கள், காரணம், இதனை அவர்கள் விரிவாகப் பேச முடியும். எனக்கு இது வராது.
மேலும், நான் தொலைபேசியில் பேசும்போது கூட நன்றாக பேசுபவன் அல்ல. கம்யூனிகேஷனில் நான் மோசம். எனக்கு நேரடியாக ஒருவரிடம் பேசத்தான் பிடிக்கும் அதைத்தான் விரும்புவேன். போனில் முகத்தைப் பார்க்க முடியாது என்பதால் உரையாடலுக்கான உணர்வு எனக்கு வராது, தொலைபேசியைப் பொறுத்தவரை நான் ஒரு கரடுமுரடானவன். இதில் மேம்பட வேண்டுமென்றுதான் விரும்புகிறேன் ஆனால் நல்ல வேளையாக நான் மேம்படவில்லை. மொபைல் போன் வந்த புதிதில் அதை வைத்திருப்பவருக்கு உபயோகமாக இருந்தது. இப்போது மற்றவர்களின் பயன்களுக்கானதாக மாறிவிட்டது.” என்று தோனி மனம் திறந்து பேசினார்.

More Stories
முகத்தில் படுகாயமடைந்த பென் ஸ்டோக்ஸ் – நடந்தது என்ன?
டி20 உலகக் கோப்பை: ஹேசில்வுட் விலகல்..! சிக்கலில் ஆஸ்திரேலியா!