சென்னை: கசிந்திருப்பதாகக் கூறப்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தரவுகளின் தன்மை என்ன ? அவை தேசிய பாதுகாப்பிற்கோ, மக்களின் பாதுகாப்பிற்கோ ஏதேனும் ஆபத்தை உருவாக்குமா? என்பன குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகுகளின் கட்டமைப்பு, உபகரணங்கள் வழங்குநர்கள், காப்பீடு தொடர்பானத் தகவல்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகள் இணையத் தாக்குதலின் மூலம் திருடப்பட்டு சட்ட விரோத இணையத்தில் (Dark Web) கசிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் திருட்டை, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வடிவமைப்பு தொடர்பானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், இந்த விவகாரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கின்றன.
வல்லுநர்களின் கருத்துப்படி, கசிந்திருப்பதாகக் கூறப்படும் இந்தத் தரவுகள் பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமானவை. அவை தவறான கைகளுக்குச் சென்றால், நாட்டின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைக்கும் செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் இருக்கலாம் என்ற எச்சரிக்கையை அலட்சியப்படுத்த முடியாது.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்படக் கூடாது என்று ஆண்டாண்டு காலமாகப் போராடிய மக்களின் மிகப்பெரிய அச்சம் என்பது, ”என்றாவது ஒரு நாள் பாதுகாப்பில் சிறிய தவறே ஏற்பட்டாலும் அதன் விளைவுகளைப் பல தலைமுறைகள் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்பதுதான். இதனால் தான் பல லட்சக் கணக்கான மக்கள் தமிழ்நாடு முழுமைக்கும் ஒன்றிணைந்து போராடினார்கள்.
இன்று வெளியாகியுள்ள இந்தத் தகவல் கசிவு, அந்த மக்களின் அச்சம் வெறும் கற்பனை அல்ல என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மக்களின் பாதுகாப்புக் கவலைகளை இலகுவாக எடுத்ததன் விளைவு இதுவா? என்ற கேள்வி, இன்று இன்னும் வலுவாக எழுகிறது.
இப்படியான செயல் கூடங்குளத்தில் முதன்முறையாகவும் நடக்கவில்லை. 2019-ம் ஆண்டிலும் சைபர் தாக்குதல் நடைபெற்றது. அப்போது முதலில் மறுத்த மத்திய அரசு, பின்னர் தாக்குதல் நடந்ததை ஒப்புக்கொண்டது. அதில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லையா? பாதுகாப்பு அமைப்புகள் பலப்படுத்தப் படவில்லையா? என்றம் கேள்விகளுக்கு இன்று பதில் தேவைப்படுகிறது.
அணுமின் நிலையம் என்பது ஒரு சாதாரணத் தொழிற்சாலை அல்ல. அதன் பாதுகாப்பில் ஏற்படும் எந்த சீர்கேடும், மக்களின் மன நிம்மதியையும், தேசிய பாதுகாப்பின் மீதான நம்பிக்கையையும் சிதைக்கும். இப்படிப்பட்ட முக்கியத் தரவுகள் திருடப்படும் அளவுக்கு பாதுகாப்பு பலவீனமாக இருந்திருந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார் ?
மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர்கள், தகவல் பாதுகாப்பைக் கூட உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், அது மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி தான். அணுசக்தி போன்ற அதி முக்கியத் துறைகளில் அலட்சியம் என்பது சாதாரண தவறல்ல. அதன் விளைவுகள் பேராபத்தாக மாறக் கூடியவை.
எனவே, மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து உடனடியாக வெளிப்படையான விளக்கத்தை வெளியிட வேண்டும். கசிந்திருப்பதாகக் கூறப்படும் தரவுகளின் தன்மை என்ன ? அவை தேசிய பாதுகாப்பிற்கோ, மக்களின் பாதுகாப்பிற்கோ ஏதேனும் ஆபத்தை உருவாக்குமா ? அதனைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ? என்பன குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோல், தமிழக அரசு இந்த விவகாரத்தை மிக உயர்ந்த முன்னுரிமையுடன் மத்திய அரசிடம் எடுத்துரைத்து, முழுமையான விளக்கத்தையும் பாதுகாப்பு உறுதியையும் பெற்று, தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

More Stories
”ஊழலில் ஈடுபட்டால் பதவி பறிக்கப்படும்” – அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை!
ஒரு உள்ளாட்சி எல்லையில் வசிப்பவர்கள் மற்றொரு உள்ளாட்சி மயானத்தை பயன்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்