August 11, 2026

கேரள பள்ளியில் சாவர்க்கர் பற்றி கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆகஸ்ட் 6 அன்று, சமூக அறிவியல் மன்றம் சார்பில் ‘சுதந்திர வினாடி வினா 2026’ போட்டி நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான வினாத்தாளில் ஐந்தாவது கேள்வியாக, “ஆங்கிலேயர்களிடம் அதிகபட்ச தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?” எனக் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ‘சாவர்க்கர்’ என்பது பதிலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வித்தாள் பெரிய சர்ச்சையையும், போராட்டங்களையும் உருவாக்கியதால் கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.

வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர் குழுவுக்குப் பல்லத்தட்கா பள்ளி ஆசிரியர் குரு பிரசாத் தலைமை தாங்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் பரிந்துரைத்தார். ஆசிரியர் குரு பிரசாத் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்வித் துறையில் ‘சங் பரிவார்’ நிகழ்ச்சி நிரல் புகுத்தப்படுவதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், சாவர்க்கர் அதிக காலம் சிறைத் தண்டனை அனுபவித்தது வரலாற்று உண்மை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் கூறினார். நீதிமன்றத்தின் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஆசிரியர் குரு பிரசாத் நிரூபிப்பார் எனக் கூறியுள்ள சுரேந்திரன், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Spread the love