February 7, 2026

மதுரை | டீ கடையில் மது குடித்தவர்களை கண்டித்த அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

மதுரை | டீ கடையில் மது குடித்தவர்களை கண்டித்த அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை

மதுரை: சிலைமான் அருகே இன்று அதிகாலை அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகிலுள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதிமுக பிரமுகரான இவர், அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போன்று கடையை திறக்க சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை அரிவளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவு நேரம் செந்தில் குமாரின் டீ கடையில் மது அருந்தியதாகவும் அதனை செந்தில் குமார் கண்டித்ததால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Spread the love