பிரதமர் நரேந்திர மோடி இன்று மலேசியா செல்வது குறித்து…

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று(பிப்.7) மலேசியா செல்கிறார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்வதைத் தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மற்றும் பிற வணிகப் பிரதிநிதிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
இத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள் உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 10 ஆவது இந்தியா – மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகளின் மன்றம் (ஃபோரம்) நடைபெறவுள்ளது.
இந்த பயணத்தின் சிறப்பம்சமாக, இந்திய வம்சாவளி கலைஞர்கள் பங்கு பெரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனம் ஆடி, மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சி செய்கின்றனர்.
இந்த பெரிய சமூக நிகழ்வு ‘சலாமத் டத்தாங் மோடி ஜி’ என்ற வரவேற்பு நிகழ்வில் இன்று மாலை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
இந்திய வம்சாவளியினரின் ஒற்றுமை, கலாசார பெருமையை உலகிற்கு காட்டும் வகையில் அமையும். இந்த நிகழ்வு இந்தியா-மலேசிய உறவுகளை கலாசார ரீதியாக வலுப்படுத்தும்.
இந்த சாதனை முயற்சி, சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா முழுவதிலுமிருந்து வரும் கலைஞர்களின் கலாசார நிகழ்ச்சிகளுடன், இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-மலேசியா உறவுகளில் வளர்ந்து வரும் நெருக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், இந்த சமூக நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் கூட்டாக உரையாற்ற உள்ளனர்.
மலேசியாவில் 29 லட்சம்(2.9 மில்லியன்) இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இது உலகின் மூன்றாவது பெரிய இந்திய வம்சாவளி சமூகமாகும். மேலும், இது இரண்டாவது பெரிய இந்திய வம்சாவளி மக்கள் சமூகமாகவும் உள்ளது. மலேசியா ஆசியான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய பங்காளியாகும். மேலும், இது இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய கொள்கை’யின் ஒரு முக்கிய தூணாகவும் உள்ளது.
கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்ட்ஸில் அமைந்துள்ள தோரண வாயில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான நட்பின் அடையாளமாக இந்தியாவால் மலேசியாவிற்கு வழங்கப்பட்ட ஒரு பரிசாகும். இந்தத் தோரண வாயில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோரால் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி 2025 ஜூலை 6 ஆம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்தித்தார். பிரதமர் மோடி அக்டோபர் 26 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற 22 ஆவது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்றார். அக்டோபர் 22 இல் இரு பிரதமர்களும் தொலைபேசி மூலமாகவும் உரையாடினர்.

More Stories
“இப்படிப்பட்ட காஷ்மீரை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை” – முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோ வைரல்
இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை ஒருபோதும் ஹிந்துக்களை மிஞ்சாது: ஓவைசி
விமானங்களின் தரப் பரிசோதனை: 754-ல் கோளாறானவை 377 – மத்திய அரசு தகவல்