
சென்னை: “மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக வழங்கப்பட்டதோடு ரூ.2000 சேர்த்து 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதற்கு எல்லோரும் பிஹாரை உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் பிஹாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும் ஏனென்றால் அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது. இங்கு அப்படி இல்லை.” என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத்தொகையுடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பெண்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். ஆனால் மறுபடியும் மத்திய அரசு இதை முடக்க பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை. இது தர்மத்திற்கு எதிரானது.
அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மகளிர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் எல்லாவற்றையும் தேர்தலுக்கு ஆக மட்டுமே செய்கிறார்கள் ஏனென்றால், சென்ற முறை பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் இல்லை, இப்பொழுது கொடுத்தால் மக்கள் மறந்து விடுவார்கள் அதனால் தேர்தல் ஆண்டு கொடுக்கலாம் என்று சொன்னவர்கள் தான் திமுகவினர்.
இவர்கள் அதைத்தான் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இன்று ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் இந்த திட்டம் அறிவித்த பின்பு இரண்டு ஆண்டுகள் கொடுக்காமல் இருந்துவிட்டு பின்பு கொடுத்தார்கள்?. இன்று தேர்தலுக்காக ஒட்டுமொத்தமாக கொடுக்கும் இவர்கள் ஏன் ஆரம்பிப்பதற்கு முன்னால் உள்ள தொகையை சேர்த்து மக்களுக்கு கொடுக்கவில்லை?. அதுவே மக்களை ஏமாற்றுவது தானே.
அதுமட்டுமல்ல டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உரிமைத் தொகையை உயர்த்திக் கொடுப்பதில் என்ன பலன்?. ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில். குடிக்கும் பழக்கம் உள்ள நபரால் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் 6 ஆயிரம் ரூபாய், டாஸ்மாக்கிற்காக செலவழிக்கிறது என்கிறது. டாஸ்மாக் மூலமாக 45,000 கோடியை இந்த அரசாங்கம் சம்பாதிக்கிறது.
ஆக குடும்பங்களை குலைத்துவிட்டு குடும்பப் பெண்களுக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறது இந்த அரசு. எல்லோரும் பிஹாரை உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் பிஹாரில் பெண்களுக்கு கொடுக்கும் பணம் அந்த குடும்பத்திற்கு மட்டுமே செலவழிக்கப்படும் ஏனென்றால் அங்கே பூரண மதுவிலக்கு இருக்கிறது இங்கு அப்படி இல்லை. அதுமட்டுமல்ல பெண்கள் எல்லோரும் தொழில் முனைவோராக வேண்டும் முதலாளிகளாக வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி முத்ரா திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி பேர் பலனடைந்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக பெண்களுக்கு உடனே அவர்கள் வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவியாக கடன் உடனே கொடுக்கப்படுகிறது. ஆக இந்த திமுக அரசு பெண்களுக்கான தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாமல், தொல்லை நோக்கு திட்டத்தை தான் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் மகளிரும் தேர்தலுக்காக மட்டுமே பதற்றப்பட்டு இவர்கள் அறிவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்ததாக வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களுக்கு இதைவிட சுய சார்பானவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் சுய கவுரவம் உள்ளவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது மட்டுமல்ல ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதை என் சகோதரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமட்டுமல்ல பிரதமர் கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா மூலமாகத்தான் இவர்கள் நினைத்தாலும் விடியா அரசு விடிவதற்குள் உடனே பெண்களுக்கு போட முடிகிறது என்பதற்கும் பிரதமரை இவர்கள் பாராட்டியாக வேண்டும். முதல்வர் வேண்டுமென்றே மத்திய அரசின் மீது முடக்கப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார் நாடாளுமன்ற தேர்தலின்ப்து கூட இந்த திட்டம் முடக்கப்படவில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்

More Stories
சேலத்தில் இன்று தவெக பிரசார கூட்டம்! சரியான நேரத்துக்குள் வந்த விஜய்
தேர்தல் நேரத்தில் ரூ.5000 வரவு வைக்கும் திமுகவின் ‘பேட்ச் ஒர்க்’ வேலையை மகளிர் நம்பமாட்டார்கள்: பழனிசாமி
“தவெகவுக்கு பெருகும் மகளிர் ஆதரவே திமுக ரூ.2000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கக் காரணம்” – விஜய்