February 15, 2026

அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் லேண்ட் ஆகி திறந்துவைத்த மோடி!

சீன எல்லைக்கு அருகே அமைந்துள்ளது!

அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் லேண்ட் ஆகி திறந்துவைத்த மோடி!

புதுடெல்லி: வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் சனிக்கிழமை காலை அசாமின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility-ELF) தரையிறங்கியது. இது மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் பகுதி அசாமின் மோரான் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக தரையிறங்கி இந்த வசதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். ரூ.5,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.

முன்னதாக மோடி, சாபுவா விமானநிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை அசாம் ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சாபுவாவிலிருந்து, திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மோரன் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவசர தரையிறங்கும் வசதிக்குச் செல்ல இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் பிரதமர் ஏறினார்.

ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட 4.2 கிமீ நீள வசதியில் அவர் தரையிறங்கினார். வடகிழக்கு பிராந்தியத்தில் இதுபோன்ற உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love