February 21, 2026

ஏழைகளுக்கு மலிவு விலையில் டெல்லியில் 25 அடல் கேன்டீன்கள்

ஏழைகளுக்கு மலிவு விலையில் டெல்லியில் 25 அடல் கேன்டீன்கள்

புதுடெல்லி: ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் நோக்கில் தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு டிசம்பர் 25-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில் அடல் கேன்டீன் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்துக்காக ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 அடல் கேன்டீன்கள் திறக்கப்பட்டன. இங்கு ரூ.5-க்கு உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 100 கேன்டீன்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று 25 அடல் கேன்டீன்கள் திறக்கப்பட்டன. டெல்லி கிருஷ்ணா நகரில் அடல் கேன்டீனை மாநில முதல்வர் ரேகா குப்தா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், உள்ளூர் எம்.பி.யுமான ஹர்ஸ் மல்கோத்ரா, டெல்லி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆசிஷ் சூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு கேன்டீனிலும் நாள் ஒன்றுக்கு 1,000 உணவுகள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் டெல்லியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலனடைவர் என முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.

Spread the love