February 22, 2026

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி ஆர்ப்பாட்டம்

படம்: ம.பிரபு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் புழக்கத்தைக் கண்டித்து தமிழக பாஜக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் என்டிஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக இளைஞரணி தொண்டர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஜி.சூர்யா பேசியதாவது: டெல்லிக்குத் தமிழகம் எப்போதுமே ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ என்று அடிக்கடி முழங்கும் முதல்வர் ஸ்டாலின், உண்மை யில் உங்கள் அரசாங்கமே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இளைஞர்களின் எதிர்காலத்துக்குப் பெரும் எதிரியாக இந்த அரசு மாறியிருக்கிறது.

சுமார் 11,000 பேர் எழுதும் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுது வதற்குக்கூட முறையான ஏற்பாடுகளைச் செய்யாத அரசு தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. 500 மதுக்கடைகளை மூடிவிட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு, அதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான ‘மனமகிழ் மன்றங்களை’ திறந்து வைத்திருப்பதைப் பற்றி வாய்திறப்பதில்லை.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே மனமகிழ் மன்றங்களைத் திறக்க வேண் டிய அவசியம் என்ன? இதைத் தட்டிக் கேட்டால் உடனடியாக வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள். போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல் துறைக்கோ அல்லது புலனாய்வுத் துறைக்கோ பொதுமக்கள் தகவல் கொடுத்தால், அந்தத் தகவல் அடுத்த நிமிடமே குற்றவாளிகளுக்கு எப்படிக் கசிகிறது ? துறையின் ரகசியத்தைக் காக்க முடியாதது ஏன்?

தமிழக இளைஞர்களே சிந்தித்துப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தைச் சிதைக்கும் இந்த நிர்வாகச் சீர்கேட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் பேசினார்.

Spread the love