February 28, 2026

பண மோசடி வழக்கு | ”ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய முறையான அனுமதி” – அமலாக்கத்துறை தகவல்!

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் – மேக்ஸிஸ் பணமோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் எதிரான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

2006-2007 காலத்தில் பா. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் நிறுவனங்களுக்கு அந்நிய முதலீட்டு ஒப்புதல் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 2024-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் பா. சிதம்பரம் கடந்த 2006 – 2007 காலக்கட்டத்தில் நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு FIPB எனப்படும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதே காலக்கட்டத்தில், ஏர்செல் நிறுவனத்திற்கு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 3,500 கோடி முறையற்ற ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

இதைத் தொடர்ந்து, 2008- ஆம் ஆண்டு இவ்விரு வழக்குகளிலும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தாக்க செய்தது. 2010 ஆம் ஆண்டு FEMA சட்டமீறல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்தின் நேரடி அல்லது மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பணம் கைமாறியுள்ளது என விசாரணையில் கூறப்பட்டது. அதன்படி, அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ஷெல் நிறுவனங்கள் மூலம் இந்தப் பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பெறப்பட்ட பணம் வசந்த் ஹெல்த்கேர் மற்றும் ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக கூறி, கடந்த 2017 கார்த்திக் சிதம்பரத்தின் மீது பணமோசடி வழக்கு பதியப்பட்டது.

Spread the love