புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் கடைசி நேர வேண்டுகோளை முன்வைத்துள்ளார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்துவது குறித்த விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 1 மணி வரையில் இந்த விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. தவறான புரிதல்களை நீக்கும் வகையில் தர்க்க ரீதியிலான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்ட கூடுதல் தகவல்களும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. எவருடைய மனதிலாவது எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடிய சிக்கல்கள் இருப்பின் அவையும் தீர்க்கப்பட்டுள்ளன.
நாட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தைச் சுற்றி கடந்த 40 ஆண்டுகளாக பெருமளவிலான அரசியல் விளையாட்டுக்கள் அரங்கேறி வந்துள்ளன. நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் நிச்சயம் கிடைக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும்.
சுதந்திரம் பெற்று பல பத்தாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும்கூட முடிவெடுக்கும் செயல்முறைகளில் இந்தியப் பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவம் இருப்பது ஏற்புடையது அல்ல. இன்னும் சற்று நேரத்தில் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். தயவு செய்து உரிய முறையில் ஆலோசித்து முழுமையான உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒரு முடிவை எடுத்து பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களியுங்கள்.
நாட்டின் பெண்கள் சக்தியின் சார்பாக அனைத்து உறுப்பினர்களிடமும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பெண் சக்தியின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய எதையும் செய்துவிடாதீர்கள். நாட்டின் கோடிக்கணக்கான பெண்களின் கண்கள் நம் அனைவர் மீதும், நமது நோக்கங்கள் மீதும், நமது முடிவுகள் மீதும் பதிந்துள்ளன. தயவு செய்தி மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்துக்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

More Stories
“தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியின் கட்டமைப்பை சிதைத்துவிடும்” – சசி தரூர்
“மகளிர் இடஒதுக்கீடு… அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமில்லை” – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் .. “இது காலத்தின் கட்டாயம்” பிரதமர் மோடி பேச்சு!