April 23, 2026

காலை 9 மணி நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 17.69% வாக்குப் பதிவு

மதுரை மாவட்டத்தில்  காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்.

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 20.38% வாக்குகள் பதிவாகியுள்ளது.

பிரபலங்கள் வாக்களிப்பு: வாக்குச்சாவடிக்கு வழக்கம் போல் காலையிலேயே வந்த நடிகர் அஜித் குமார் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே வாக்களித்துச் சென்றார். அதேபோல் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் தொகுதியில் குடும்பத்துடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

சென்னையில் தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு அவரது கணவரும் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தர்.சி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், எனப் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்தனர்.

தலைநகர் சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 16.51% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொகுதிகள் வாரியாக:

அண்ணா நகர் – 17.06%

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி (19) – 15.70%

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – 16.32%

எழும்பூர் – 15.64%

துறைமுகம் – 15.01%

கொளத்தூர் – 17.51%

மயிலாப்பூர் – 14.51%

பெரம்பூர் – 16.96%

ராயபுரம் – 14.39%

சைதாப்பேட்டை – 16.05%

திருவிக நகர் – 14.38%

தியாகராய நகர் – 18.75%

ஆயிரம் விளக்கு – 16.66%

வேளச்சேரி – 18.12%

வில்லிவாக்கம் – 17.02%

விருகம்பாக்கம் – 18.85%

களத்தில் 4,023 வேட்​பாளர்​கள் : தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்​பாக்​கி ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

Spread the love