May 15, 2026

“முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யாரென்று தெளிவுபடுத்துக” – விஜய்க்கு பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: முகத்தை மூடிக்கொண்டு தனது வீட்டுக்கு வந்ததவர் யார்? என்பதை முதல்வர் விஜய் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்.

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு நிபந்தனை இல்லாத ஆதரவு’ என்று வெளிப்படையாக தெரிவித்தார்களோ, அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் குதிரை பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள்.

மேலும், ‘முகத்தை மூடிக்கொண்டு வந்தவர் யார்?’ என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, அதற்கு பின்பு எந்தவிதமான குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 13-ம் தேதி தமிழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ, தவெக அரசு மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், முதல்வரின் ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசு இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை வைக்கிறது என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேசியிருந்தார். அன்றைய தினமே ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை அரசு ரத்து செய்தது என்பது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், விஜய் பெரும்பான்மைக்காக அரசியல் கட்சிகளை நாடிக்கொண்டிருந்த போது அவரது வீட்டுக்கு முகத்தை மூடிக் கொண்டு வந்த நபர் யார் என்று பிரேமலதா வினவியுள்ளார்.

Spread the love