
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், நிலக்கரி ஏற்றுமதியை அமெரிக்கா அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“எங்கள் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் எரிசக்தி சார்ந்த ஏற்றுமதி செய்யும் தேசமாக உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா மற்றும் பல உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு நிலக்கரி சார்ந்த ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம். இது வரலாற்று சிறப்பு மிக்கது. அதற்கு காரணம் நமது நிலக்கரியின் தரம்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்திருந்தது. இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால், இந்தியா மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்படுவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
அப்போது அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு பொருட்களை வாங்க இந்தியா உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாயின. அது பல குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்தியாவை அமெரிக்காவிடம் மோடி அரசு விற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. ஆனால் 24 மணி நேரத்தில் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில அம்சங்களை அமெரிக்கா திருத்தி உள்ளது.
இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் கூடுதல் சலுகைகள் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் வேண்டுகோள்படி சில முக்கிய மாற்றங்களை வர்த்தக ஒப்பந்தத்தில் செய்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்ட பின்பு இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகும் என தகவல்.

More Stories
ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?
வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் | இருமுனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத் தேர்தல்