March 31, 2026

தாம்பரம் திமுகவில் அதிருப்தி: எஸ்.ஆர்.ராஜாவை சந்தித்தார் புதிய வேட்பாளர்

தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர் கிருத்திகா தேவி. உடன் ஆ.ராசா, எம்.பி

தாம்பரம்: தாம்பரம் தொகுதி வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இந்நிலையில் எஸ்.ஆர்.ராஜாவை புதிய வேட்பாளர் சந்தித்து வாழ்த்து பெற்றார் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம்பரம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ.வாக உள்ள எஸ்.ஆர்.ராஜாவுக்கு இம்முறை போட்டியிட சீட் வழங்கவில்லை. புதுமுகமான மருத்துவர் கிருத்திகா தேவிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.ஆர்.ராஜா ஆதரவா ளர்கள் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று தாம்பரம் வந்த ஆ.ராசா, எம்.பி., எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ‘‘தலைமை அறிவித்துள்ளதால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ என ஆ.ராசா அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் எஸ்.ஆர்.ராஜா இல்லத்தில், புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் கிருத்திகா தேவி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதற்கிடையே எஸ்.ஆர்.ராஜாவிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி, ‘நான் நிறுத்திய வேட்பாளரை நீங்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த விவகாரம் தாம்பரம் திமுகவினரிடம் நீரு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இதனை அதிமுகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்தி வருகின்றனர்.

Spread the love