March 27, 2026

தொழிலதிபர் மகன் ஓட்டிய சொகுசு கார் விபத்து! 6 பேர் படுகாயம்!

தொழிலதிபர் மகன் ஓட்டிய சொகுசு கார் விபத்துக்குள்ளானது பற்றி…

விபத்து ஏற்படுத்திய கார்

விபத்து ஏற்படுத்திய கார்

உத்தரப் பிரதேசத்தில் பிரபல தொழிலதிபரான கே.கே. மிஸ்ராவின் மகன் அதிவேகமாக ஓட்டிய சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

புகையிலை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் கே.கே.மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை பகல் 3.15 மணியளவில் லம்போர்கினி காரில் அதிவேகமாக சென்றுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது முதலில் மோதியுள்ளது. பின்னர், சாலையோரம் நின்று கொண்டிருந்தபாதசாரிகள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படும் நிலையில், கான்பூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் ஷிவம் மிஸ்ரா தப்ப முயற்சித்ததாகவும், காரின் கண்ணாடியை உடைத்த மக்கள் அவரை தாக்க முயற்சித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஷிவம் மிஸ்ராவின் காரைப் பின்தொடர்ந்து வந்த பவுன்சர்கள் அவரை பாதுகாத்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஷிவம் மிஸ்ரா மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும், சம்பவத்தின் போது ஷிவம் மிஸ்ரா மதுபோதையில் இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Spread the love