March 23, 2026

மறக்க முடியுமா? – விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள் – கதறவிட்ட தோனி படை

2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில் வங்கதேச ரசிகர்களின் வங்கதேச வீரர்களின் அழுகையாக மாறியது தெரியுமா? அன்று தோனி படை, குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய அந்தக் கடைசி ஓவரை மறக்கவும் முடியுமோ!!

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பல போட்டிகள் இருந்தாலும், 2016-ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் இடையிலான டி20 உலகக்கோப்பை போட்டியை எந்தவொரு ரசிகரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தோல்வியின் பிடியிலிருந்து இந்தியா மீண்டு வந்த அந்தத் தருணம் குறித்து, வங்கதேச வீரர் மஹ்முதுல்லா தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர்- தோனியின் அட்டகாச ஃபீல்ட் சேஞ்ச்!

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சுரேஷ் ரெய்னாவின் (30 ரன்கள்) அதிரடியால் 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்திருந்தது. இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம், கடைசி ஓவர் வரை வெற்றியைத் தன் வசமே வைத்திருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் வங்கதேச வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.முஷ்பிகுர் ரஹீம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, வங்கதேசத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கருதினோம்.

ஆனால், அடுத்த இரண்டு பந்துகளில் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா ஆகிய இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து ஹர்திக் பாண்டியா கடும் அதிர்ச்சி அளித்தார். முஷ்பிகுர் ரஹிம் பாண்டியா வீசிய பந்தை பவுண்டரி அடித்து வெல்ல வேண்டும் என்ற ஆசையில் தூக்கி அடிக்க பந்து ஷிகர் தவன் கையில் டீப்பில் அகப்பட கேட்ச் அவுட் ஆனார்.

அப்போது ரன்னர் பேட்டர் கிராஸ் ஓவர் செய்யலாம். அதனால் அடுத்த பந்தை மஹ்முதுல்லா எதிர்கொண்டார். அடுத்த பந்து தி எவர் கிரீன் எம்.எஸ்.தோனி செய்த அட்டகாச பீல்ட் சேஞ்ச் மேட்ச் சேஞ்ச் என்றுதான் கூற வேண்டும். ஆஃப் திசையில் இருந்த ரவீந்திர ஜடேஜாவைக் கொண்டு போய் மிட் விக்கெட்டுக்கும் லாங் ஆனுக்கும் இடையே ‘கண்ட்ரி’பகுதியில் பவுண்டரி அருகே கொண்டு நிறுத்தினார். மஹமுதுல்லா நேராக அவர் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதுதான் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பேட்ஸ்மேன் சுவகதா ஹோம் பந்தை அடிக்கத் தவறினார். அப்போது விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனி, கையுறையைக் கழற்றிவிட்டு மின்னல் வேகத்தில் ஓடி வந்து ஸ்டம்புகளைத் தட்டி, முஸ்தபிசுர் ரஹ்மானை ரன்-அவுட் செய்தார். இதன் மூலம் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள்:

இந்தத் தோல்வி குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மஹ்முதுல்லா, “அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அது மிகவும் துயரமானது மற்றும் இதயத்தை உடைக்கும் சம்பவம். நாங்கள் மைதானத்திலேயே அழுதோம். ஹோட்டலுக்குச் சென்ற பிறகும் நானும், முஷ்பிகுர் ரஹீமும் விடிய விடிய அழுதோம். இந்தியாவை வீழ்த்தும் மிக நெருக்கமான வாய்ப்பு அது.

மேலும் சிங்கிளாக எடுத்து ரிஸ்க் இல்லாமல் ஆடி வென்றிருக்கலாம். ஆனால் பெரிய ஷாட் அடித்து வெற்றியைத் தேட நினைத்தது ஒரு முட்டாள்தனமான முடிவு” என்றார் மஹமுதுல்லா.

146 ரன்களை வைத்துக் கொண்டு வெல்வதெல்லாம் தோனியினால் மட்டுமே முடியும். அதனால்தான் இந்தப் போட்டியை மறக்க முடியாது. 2016 உலகக்கோப்பையில் இந்த வெற்றியின் மூலம் அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியா, மும்பையில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது வேறொரு துயரக்கதை.

Spread the love