June 15, 2026

அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு

30,000 பேர் தவெகவில் இணைந்ததாக அறிவிப்பு; திமுக, அதிமுக மீது சரமாரி விமர்சனம் செய்த ஆதவ் அர்ஜூனா.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மாநாட்டை ஒத்த வகையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் தவெகவில் இணைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் அதிமுக தலைமைகளை கடுமையாக விமர்சித்தார்.

  

OPS செய்த தவறை அதிமுகவினர் செய்ய மாட்டார்கள்

தொடக்கத்திலேயே அதிமுகவை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக கூறப்படும் திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தது போன்ற தவறை இனி எந்த அதிமுக தொண்டரும் செய்ய மாட்டார்கள் என்றார்.

மேலும், ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக கூறப்படும் திமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி மனசு வந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுகவும் தவெகவும் ஒன்று தான்

அதிமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் உறவு குறித்து பேசிய அவர், அதிமுக என்ற கப்பல் மூழ்கவில்லை. அந்த கப்பலை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஒருபோதும் மூழ்க விடாது. அதிமுகவும் தவெகவும் ஒன்று தான். ஆனால் இன்று அரசியல் ரீதியாக மூழ்கிக் கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்று தெரிவித்தார்.இந்த கருத்து கூட்டத்தில் இருந்த தவெக தொண்டர்களிடையே கைதட்டலை பெற்றது.


திருமாவளவன் கூறியது என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பேசியது குறித்து குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, நான் திருமாவளவன் அண்ணனிடம் பேசினேன். தவெக ஆட்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் வராது. திமுக செய்யும் பொய் பிரச்சாரங்களுக்கு மட்டுமே நான் பதில் அளித்து வருகிறேன் என்று அவர் தெரிவித்தார் என்றார்.


திமுக அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்ததா?

சமூக நீதி குறித்து திமுக பேசுவதை சுட்டிக்காட்டிய அவர், தவெக ஆட்சியில் 8 பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். இதற்கு முன்பு தமிழகத்தில் எந்த ஆட்சியிலும் இவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதா? சமூக நீதி என்று பேசும் திமுக, உண்மையில் அதிகாரத்தை எத்தனை பேருடன் பகிர்ந்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.

MGR-க்கு செய்ததை விஜய்க்கும் செய்கிறார்கள்

திமுக தலைமையை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, தேர்தலுக்கு முன்பு எம்.ஜி.ஆருக்கு என்னென்ன அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதோ, அதேபோல் தற்போது முதல்வர் விஜய்க்கும் செய்யப்படுகிறது. நாங்கள் கவர்ச்சியால் வெற்றி பெற்றோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். 50 ஆண்டுகள் அரசியலில் இருந்த உங்களுக்கு ஏன் அந்த கவர்ச்சி இல்லை? என்று பேசினார்.

அரசியல் களத்தில் பேசுபொருளான விழா

30 ஆயிரம் பேர் தவெகவில் இணைந்ததாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியும், அதில் ஆதவ் அர்ஜுனா முன்வைத்த கருத்துகளும் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிமுக, திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Spread the love