June 14, 2026

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்: 5,000 பள்ளிகளில் மெகா பிளான் – அமலாகும் 2 முக்கிய மாற்றங்கள்..

AI Coding Training in Govt Schools: தமிழகத்தில் உள்ள 5,000 அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். கூடவே பல அதிரடி உத்தரவுகளையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை இப்போதே உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். கூடவே, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் குறித்துப் பல அதிரடி உத்தரவுகளையும் வெளியிட்டுள்ளார். தற்போது அது குறித்து பார்ப்போம்.

செயற்கை நுண்ணறிவுக்கு புதிய துறை

இந்த உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியில் மிக முக்கியமான இடத்தைப் பெற்று இருப்பது செயற்கை நுண்ணறிவு. இன்றைக்கு ஏஐ நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இதையடுத்து, எதிர்வரும் காலங்களிலும் ஏஐ அசுர வளர்ச்சியை எட்டக்கூடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதை புரிந்துக் கொண்டு ஏற்கனவே செயற்கை நுண்ணறிவுக்கென புதிய துறையையும் அமைத்து இருக்கிறது தமிழக அரசு.

  

அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பக் கல்வி

மேலும், பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாட்டை கொண்டுவர தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வரும் வேளையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெறும் மனப்பாடக் கல்வியையும், மதிப்பெண்களையும் மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தயார்படுத்தும் நோக்கத்தில் இப்போதிலிருந்து நவீன தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

5,000 அரசுப் பள்ளிகளில் ஏஐ – கோடிங் பயிற்சிகள்

இம்மாபெரும் சிறப்புமிக்க திட்டத்தை முதற்கட்டமாகத் தமிழகத்தில் இருக்கும் 5,000 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக செயற்கை நுண்ணறிவு, காக்னிட்டிவ் செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, கோடிங், பைதான், ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி மற்றும் ஹெச். டி. எம். எல் போன்ற நவீன தொழில்நுட்பப் பாடங்கள் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே நேரடியாகக் கற்றுக்கொடுக்கப்பட உள்ளன.

இந்த மெகா திட்டத்தின் நோக்கம் என்ன?

அரசுப் பள்ளி மாணவர்கள் சர்வதேச நிறுவனங்கள் தயாரிக்கும் சாட் ஜிபிடி அல்லது கூகுள் ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை பயன்படுத்தும் வெறும் பயனாளர்களாக மட்டுமே இருக்கக் கூடாது. அதுபோன்ற புதிய உலகத் தரத்திலான ஏஐ தொழில்நுட்பங்களையும், புதிய கணினி மென்பொருட்களையும் சொந்தமாகவே உருவாக்கும் அளவுக்கு அரசுப் பள்ளிகளை மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சிகள்

இந்த பாடங்களை எடுப்பதற்காக புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு டிரைனிங் தி டிரெய்னர்ஸ் முறையில் உயர் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கூடிய விரைவிலேயே இதற்கான அதிகாரப்பூர்வ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுபாடுகள்

தனியார் பள்ளிகள் கட்டண அமைப்பை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கட்டிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தீயணைப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு ஏ, பி, சி, டி என 4 பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட்டு கடுமையான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது.

6ஆம் வகுப்பிலிருந்து திடீரென 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பிற்குப் பள்ளிகளைத் தரம் உயர்த்தக் கோரும் அவசர முடிவுகளுக்கு அனுமதி கிடையாது. அனைத்து உள்கட்டமைப்புத் தகுதிகளையும் முறையாகப் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே பள்ளி புதுப்பித்தலுக்கோ அல்லது தரம் உயர்த்துவதற்கோ அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் சாதி, மத அடையாளங்களுக்குத் தடை

சாதி மற்றும் மதம் சம்பந்தப்பட்ட எந்தவொரு அடையாளத்துடனும் யாரும் கல்வி வளாகத்திற்குள் வரக்கூடாது. அது கையில் கட்டும் சிறிய கயிறாக இருந்தாலும் சரி, அதற்கு அனுமதி கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரிகள் கல்வி கற்பதற்கான இடம் மட்டுமே. எனவே, மதம், ஜாதி, அரசியல் வேறுபாடுகள் மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்த இடமில்லை.

அதற்கு பதிலாக, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் இடமாகவே பார்க்கப்படுகிறது. பலர் இந்த நிலைபாட்டை வரவேற்றாலும், தனிநபர் மத நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தும் உரிமையை பறிப்பதாக எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love